"யம்மா.. டவுசர் கிழிஞ்சு போச்சும்மா"
பழனி அழுது கொண்டே எதிரில் வரவும் அஞ்சலைக்குக் கோபம் வந்தது. "எப்ப பாரு எதினாச்சும் கேட்டுகிட்டே இருப்பியா.. போவியா"
ஏழெட்டு வீடுகளில் வேலை பார்க்கிறாள் அஞ்சலை. நேற்று பெய்த மழையில் சுத்தமாய் தூக்கம் போனது. விடிகிற நேரம் தன்னை மறந்து கண்ணயர்ந்து விட்டாள். அத்தனை வீடுகளுக்கும் வாசல் தெளித்து.. பாத்திரம் விளக்கி.. மாரியாத்தா.. என்ன பாடு படப் போறேனோ.. புலம்பலுடன் கிளம்பிய போதுதான் பழனியின் அழுகை. ஐந்து வயதாகிவிட்டது. தினசரி எதற்காவது ஒரு அழுகை. இது வேண்டும்.. அது வேண்டுமென்று. இன்னொருத்தி பின்னால் கணவன் போனபின்பு வயிற்றைக் கழுவுவதே பெரும்பாடாக இருக்கிறது. மேலே வந்து விழுந்தவனைத் தள்ளி விட்டு வேகமாக நடை போட்டாள்.
"விடிஞ்சு எவ்வளவு நேரமாச்சு.. இப்பதான் வாசத் தெளிக்கிறதா"
"மழை பெஞ்சிருக்கா.. கூட்டி விட்டா போதும்மா. இதா இப்ப கோலம் போட்டுருவேன்"
வாசல் தெளித்து.. பாத்திரம் விளக்கி.. துவைத்து.. எல்லா வேலைகளையும் முடித்தாகி விட்டது.
"அஞ்சலை.. பழைய துணிமணி சேர்ந்து போச்சு.. பக்கெட் வாங்கலாம்னு பார்க்கறேன்.. தெருவுல இப்ப வரலே.. உனக்குத் தெரியுமா யாரையாச்சும்.."
குவிந்திருந்த துணிகளைப் பார்த்தாள். " அட.. நம்ம சதீசுது இருக்குதே.. ஏம்மா சின்னதாப் போச்சா?"
"போன வருஷம் தெச்சது.. பாரு அப்படியே புதுசா இருக்கு.. போட முடியலேங்கிறான்"
அஞ்சலை குரலைத் தழைத்துக் கொண்டாள். "ஏம்மா.. இதை எம்புள்ளைக்கு எடுத்துக்கவா.. ?"
சம்மதமாய்த் தலையாட்டியதும் அஞ்சலைக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. பாவம்.. புள்ளை அழுதுகிட்டே இருந்திருப்பான். போனதும் 'இந்தாடா.. புது டவுசர்'னு நீட்டினா குஷியாயிடுவான்.
இருட்டிய பிறகுதான் வீட்டுக்குப் போனாள். பழனி அஞ்சலையைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டான். 'அவன் அப்பனை மாதிரியே கொணம்'
" இந்தாடா"
டவுசரையும் சட்டையையும் பார்த்ததும் பழனியின் முகம் பெரிதாக மலர்ந்தது. உடனேயே போட்டுப் பார்த்தான்.
'அய்.. நல்லா இருக்கு..'
அஞ்சலை மனசும் மலர்ந்து போனது. 'சதீசு மாதிரியே இருக்கான்..'
அடுத்த நிமிடம் பழனி அழ ஆரம்பித்தான்.
"என்னடா.. " அஞ்சலைக்கு எரிச்சல்.
"ஏம்மா என்னிய இஸ்கூல்ல போடலே.. இதே சட்டையை போட்டுக்கிட்டு எல்லாப் பசங்களும் போறாங்க.. நா மட்டும் வூட்டுல கிடக்கேன்." பழனியின் அழுகை பெரிதானது.
அஞ்சலைக்குத் என்ன சொல்வதென்று புரியவில்லை.
No comments:
Post a Comment